Friday, December 13, 2013

BYE Cycle



                       "BYE"   Cycle


            ஜான்   ,  அப்பாவிடம்  போன வாரமே சொல்லியிருந்தான்  . எப்படியாவது  தனக்கு ஒரு ரூபாய் தந்து விட வேண்டுமென்றும் , அதைவைத்து  பெல்சி  சைக்கிள் கடையிலிருந்து  , வாடகைக்கு  சைக்கிள் எடுத்து  பழகப்போவதாக கூறியிருந்தான் .  ஏற்கெனவே இருமுறைகள் அவர்  அடுத்த வாரம் , அடுத்த வாரம் என்று கூறி இவனை  ஏமாற்றியிருந்தார் .  இவனும்  பொறுத்துப்  பொறுத்துப் பார்த்தான் .  ஆனால்  என்றைக்குப் பக்கத்துக்கு வீட்டு சுரேஷ்  சைக்கிள் மிதித்தானோ ,  அன்றைக்கே  முடிவு பண்ணி விட்டான் . இந்த மே மாத லீவில் எப்படியும் சைக்கிள் பழகி விட வேண்டுமென்று . அதுவுமில்லாமல் அண்ணன் வேறு இவனை அடிக்கடி  "சைக்கிள் மிதிக்கத்  தெரியாத பெயல்"  என்று குறை கூறிக் கொணடே இருந்ததால் எப்படியாவது சைக்கிள் பழகி விட வேண்டுமென்று துடித்தான் .

         சைக்கிள் மிதிப்பவர்களுக்கு மிக அதிகக்  கவனம் தேவை என்று அடிக்கடி ஜெயபால் சித்தப்பா  சொல்லிக் கொண்டேயிருப்பார் . முன்னாடி மட்டும் பார்க்க வேண்டும் , சைடில் திரும்பக் கூடாது , முக்கியமாக பின்னாடி திரும்பக் கூடாது , பயப்படக் கூடாது என்று கூறிக் கொண்டிருப்பார் . அவர்தான்  போன மே மாத லீவில் இவன்  அண்ணனுக்கு சைக்கிள் மிதிக்கக் கற்றுக் கொடுத்தார் . அதனால் தானும் அவரிடமே  கற்றுக் கொள்ளலாம் என்று நினைத்தான்   . ஆனால் அண்ணன் கூறினான்  , ஏலே அந்த ஆளு நல்லாதான் சொல்லிக்  கொடுக்கான்.  ஆனா சொல்லிக் கொடுக்கிற  சாக்குல நல்லா  முதுகுல அடியும் போடுதான் என்று ! பின்ன சைக்கிள் பழகுறதுனா  சும்மாவா ?

        எப்படியோ  ஐந்தாம்   வகுப்பு வரை  உள்ளூரில் படிச்சாச்சு . அடுத்த வருஷம்  எப்படிப்பார்த்தாலும் , அப்பா ஆசிர்வாதபுரத்தில்தான் இவனைச் சேர்த்து விடுவார் . அவருக்கு என்னவோ அந்தஊர்  பிடித்த அளவுக்கு , பக்கத்துக்கு ஊரான பனையூர் பிடிக்கவில்லை. அதுவுமில்லாம   இவன்   அங்க போனா , அவரோட  சொந்தக்காரங்க  வீட்டில்தான் போய் பொழுதைப் போக்குவான்  , ஸ்கூல்-க்கு   ஒழுங்காப் போக மாட்டான் என்று அவர் நினைத்தார்  .

           போன வாரம் ஷண்முகா  தியேட்டரில் போய்  ஊமை விழிகள் படம் பார்க்கும்போது , படத்தைக் கூட பார்க்க விடாம இந்த ராமு  பெய அவன் சைக்கிள் மிதிப்பதைப் பற்றியே சொல்லிக்கொண்டிருந்தான் . இவனுக்குன்னா   பயங்கர  கோவமாயிருந்தது  . தலைவர் படத்தைக் கூட  இந்த சவத்து மூதி ஒழுங்காப்   பார்க்க விட மாட்டிக்கான? , என்ன பண்ணுறது !  படம் பார்க்க " டிக்கெட் போட்டு கூப்பிட்டு வந்தது அவன்தான் , வாடகை சைக்கிள்ள ஊரில இருந்து இவனை   வச்சு ஓட்டிக்கிட்டு வந்ததும் அவன்தான். வயசுல வேற ஒரு வருஷம் மூத்தவன்  , ஏதோ ஒன்றாம் கிளாஸ் இரண்டு வருஷம் படிச்சதனால இவனோட  பிரெண்டாயிட்டான் ".

         காட்டுல  வேற இந்த வருஷம் சரியான 'பல்லாரி' (பெரிய வெங்காயம் ) . ஆனா களைதான்  அதிகமா இருந்தது . இவனுடைய  அண்ணனுக்கு லீவுல மாடு மேய்க்கவே டைம் சரியா இருக்கும் . அதனால அப்பா  இவனை  லீவுல தினமும் காட்டுல களை எடுக்கிற பசலிகளை '(பயிர்களுக்கிடையில் வளரும் ஒரு விதமான களை )'  மட்டும் பெட்டியில்  அள்ளி மேட்டுக் கிணத்துல தட்ட வரணும்னு சொல்லியிருந்தார்   . அந்த பசலியை மட்டும் வயலில போட்டா அவ்வளவுதான் ! ,  அது சிலந்தி வலை மாதிரி படர்ந்து மொத்தப் பயிரையும் கெடுத்துப்புடும் . அதனால அதை வேரோட  வெட்டி கிணத்துக்குள்ள  தட்டிருவாங்க  . அதுக்காகவே  காட்டில் அங்கங்க இருக்கிற தண்ணி இல்லாத மேட்டுக் கிணறுகளை   உபயோகப்படுத்துவாங்க ! .

       ஒருவழியா , வியாழக்கிழமையோட ஸ்கூல் முடிஞ்சுது . ராஜா பெயலும் , கண்ணன் பெயலும் சேர்ந்து எல்லார் மேலயும் மைய உதறிப்புட்டானுவ .வருஷா வருஷம் பரீட்சை எழுத மை உபயோகிக்கிறாங்களோ இல்லையோ அடுத்தவன் சட்டையில் மட்டும் மை ஊத்திருவாங்க.   ரமேஷோட சட்டை புல்லா முன்னாடியும் பின்னாடியும் தோசை அளவுக்கு மைய ஊத்திப்புட்டானுவ !. இவனுக்கு   பயங்கர சந்தோஷம் .

             நாளையிலயிருந்து காட்டுக்குப்  போவலாம் . காலையில் ,  எப்படியும் ஐந்து  மணிக்கு எழுந்திரலாம்  ,  அப்படியே  எழும்பாட்டியும் இந்த மாடுகளை பால்கறக்க அப்பா பண்ணைக்கு ஓட்டிட்டுப்  போற சத்தத்துல  முழிப்பு வந்துரும் . முழிச்ச உடனேயே தாத்தா கடுங்காபி போட்டு ரெடியா வைத்திருப்பார் . பிறகு  ஆறு மணிக்கெல்லாம் அப்பா அல்லது சித்தப்பா  கூட  கருத்த காளையையும்   , வெள்ளை காளையையும் எழுப்பி வண்டில பூட்டி  காட்டுக்குப் போயிறலாம்  . பின்னாடியே தாத்தா  பால் மாடுவ எல்லாத்தையும் ஓட்டிக்கிட்டு  வருவார் .

          மாட்டு வண்டில போவும்போது  இவனுக்கு   மாடுகள்  வாலை  தூக்கி அடிக்கும்போதுதான் ரொம்ப பயமா இருக்கும் . அது வேணுமின்னே அப்படி பண்ணுதுன்னு நினைச்சான்  .   பிறகு  அப்பாதான் சொன்னார் ," ஏல நமக்கு உடம்புல ஊருனுச்சுன்னா  ,  அல்லது கொசு கடிச்சுதுன்னா  கையால  அடிக்கிறோம்லா  , அது மாதிரிதான்  அது வாலால  அடிக்குதுன்னு" . ஊரை தாண்டி பெரிய விளை  பக்கத்துல போகும்போது தினமும் இவன்தான்   வண்டியை  ஓட் டுவான் . தான் ஓட்டும்போது அதுக தன்னை ஏமாற்றும் என்று நினைப்பான்  , ஆனாலும் அதுக எப்படி சரியான பாதையிலே போகுதுன்னு  இவனுக்கு ஆச்சரியமாயிருக்கும் , 'எப்படி நம்ம ஓட்டாமலேயே  அதுக சரியாய் போகுது' ? அப்பாதான் சொல்வார்  , அதுவா  தினமும் இதே வழியாதன போவுது ! அதுக்குத் தெரியாதா  ? பாத தவறி போக அது என்ன  'மனுஷ ஜென்மமா' என்று   ?


               முன்னாடியெல்லாம் இவனுக்கு ரொம்ப பெருமையா இருக்கும் . ஏன்னா, இவன்  வகுப்பிலேயே  இவங்க வீட்டுல மட்டும்தான்  மாட்டுவண்டி இருந்தது . லீவு நாளில்  மாட்டுவண்டில  காட்டுக்கு கூட்டிட்டுப்போவான்னு சொல்லியே  நிறைய நண்பர்கள்  இருந்தாங்க . என்றைக்கு  ராஜ் மாமா சைக்கிள்கடை போட்டு ,  வாடகைக்கு வண்டிய விட்டாரோ அன்னியிலே இருந்தே எந்தப் பெயலுவளும்    இவனை  சீண்ட மாட்டானுவ   .  காசிருந்தா  சைக்கிள் மிதிப்பாங்க ,  இல்லன்னா மத்தவங்க சைக்கிள் விடுறதை  வேடிக்கை பார்ப்பாங்க  . இதுக்காகவே  எல்லாப்  பெயல்வளும் ஊருக்கு வடக்கே  கருத்தையா களத்துல கூடிருவாங்க .

          அப்பா இவனை களை  பறிக்க கூப்பிட்டதுமே இவன் ,' சைக்கிள் பழக எனக்கு காசு வேணும் , காசு தந்தா வருவேன் . இல்லன்னா  வரமாட்டேன் " என்றான் . இவனுக்கு அப்பா அடித்து விடுவாரோ என உள்ளூர பயமிருந்தாலும் சைக்கிள் இவனை அப்படி பேச வைத்தது ! அவர் இதுவரை இவனை அடித்ததில்லை , பிறகு  என்ன நினைத்தாரோ  தெரியவில்லை , சிரித்துக்கொண்டே அந்த இடத்தை விட்டு கடந்து சென்றார் .

            அடுத்த நாள் இரண்டு ரூபாய்  கொடுத்ததும்  , இவன்  நேரே  சைக்கிள் கடைக்கு ஓடினான் . உடனே ராஜ் மாமா , 'மருமகனே  உமக்கு எதுக்குய்யா  சைக்கிள் ' ! உங்க அப்பா வண்டிய எடுத்து மிதிக்க வேண்டியதுதானா - என்று ? .  அட ,  போங்க மாமா , 'அண்ணன் வண்டி பழகி ஒரு வருஷம் ஆவுது . அவனே அடிக்கடி எங்கயாச்சும் போய் மோதிட்டு வந்திருதான்னுட்டு  அப்பா அவனுக்கே சைக்கிள் கொடுக்கிறதில்லை   ,  பிறகு எனக்கு எப்படி மாமா தரும்' ? .

       அமுல் பெய ஒருவழியா ஒன்பது மணிக்கு  சிகப்பு பெயிண்ட் அடிச்ச சைக்கிளை டைம் முடிஞ்சு கொண்டு வந்து விட்டான்  . உடனே  மாமாவிடம்  துட்டு கொடுத்துட்டு , சைக்கிளை உருட்டிட்டு வந்தான் . இதுக்கு முன்னாடியே நேரம் கிடைக்கும்போதெல்லாம்  பீட்டர் சித்தப்பா  சைக்கிளை  வாங்கி உருட்டியதுண்டு  . பஸ் ஸ்டாண்ட்  வரைக்கும் சைக்கிளை உருட்டினான் . கரெக்டா வேப்ப மரத்தடியில் ஜெயபால் சித்தப்பா , அவங்க நண்பர்கள்  கூட பேசிக்கிட்டு இருந்தாங்க . இவனைப்  பார்த்ததும் எந்திரிச்சி வந்து ஏல ,  மொத மொத சைக்கிள் விட போற ,   சிலுவை போட்டுக்கொள் (பிதா,சுதன்  , பரிசுத்த ஆவி) என்றார்  . இவன்  உடனே , எனக்கா ? சைக்கிளுக்கா ? சித்தப்பா , என்றான் . ஏல  சைக்கிளு க்கு எதுக்குல ? உனக்குதாம்லா  என்றார் .

             சைக்கிளை  இடது பக்கம் முன்கையால்  பிரேக்கையும்  , பின் கையால் கேரியரையும்  பிடித்துக்கொண்டு  இவனை  சைக்கிளில்  ஏறச்  சொன்னார் . முதல் இரண்டு முறை ஒரு காலை பெடலில் வைத்துக் கொண்டு இன்னொரு காலை தூக்கவும்  , பின்பு  பயந்துபோய் கீழே  இறக்கவுமாக இருந்தான்  . சித்தப்பா முதுவுல ஒரு அடி போட்டு ஏறுல  எங்க அண்ணன் மவனே , சாவமாட்ட! ,   உன்னைய கீழ விழ விட்டுருவனோ என்றார் . ஒருவழியா கம்பிக்கு மேலே  காலை தூக்கி போட்டுட்டு , அது மேலேயே  உட்கார்ந்தான் . உம்   ! பெடல் இரண்டையும் மிதி என்றார் , இவனும் மிதித்தான் . ஏலே இடது பக்கமா சாயாத , நட்டுக்க (நேராக ) கம்பில  உட்காரு என்று முதுகில் ஒரு அடி போட்டார்  .
   
         அப்படியும் இடது பக்கமே சாய்ந்தான் . பிறகு மறுபடியும் முதுகில் அடி விழுந்தது . இப்போது  சித்தப்பா பின்னாடி கேரியரை மட்டும் இரண்டு கையால் பிடிச்சிக்கிட்டு  உம் , மிதி , மிதி என்றார்  . இவனும்  மிதித்தான்  . ஏதாவது ஒரு பக்கமா உடம்பை அப்படியே வளைத்தான் . அப்படி வளைக்கும்போதேல்லாம் ஏல ! நாயி  உடம்பை வளைக்காதே  , சாயாதே  , நேரே  உட்காரு , பயப்படாதே  ! உன்னைய கீழ விழ விட மாட்டேன் என்றார் .

             பின்னாடி  கேரியரை பிடிச்சிக்கிட்டு மிதி , மிதி என்று கூறும் போதெல்லாம்  இவன் , சித்தப்பா சைக்கிளை  விட்டுடாதீங்க , விட்டுடாதீங்க என்று பயந்து கொண்டே பின்னாடி லேசாகத்  திரும்பி திரும்பி பார்த்தவாறு கூறினான்  .இவன் கவனம் முழுக்க அவர் சைக்கிளை விட்டு விடுவாரோ என்பதில்தான் இருந்தது .  ஏல! ,    பின்னாடி திரும்பாத முன்னாடி மட்டும் பாரு , ரோட்டைப் பார்த்து சைக்கிள்  மிதி என்றார் .

              ஆம்! அப்படித்தான் . விடாம நல்ல மிதில , மிதில என்றார் . எல்லாம் கொஞ்ச நேரந்தான் . பிறகு சைக்கிள் மீதிருந்த பிடியை விட்டு விட்டார் . பொத்தென்று    இடது பக்கமாக  விழுந்தான் . ரோட்டுல கிடந்த கல் காலிலும் , கையிலும் குத்தி சிராய்த்து  விட்டிருந்தது  ,  லேசாக ரத்தம் கசிந்தது . "யம்மோ !யம்மோ ! சித்தப்பா வலிக்குது  ! நீங்க என்னைய ஏமாத்திட்டிய   , என்னைய வேணுமின்னே கீழ விழ வச்சிட்டிய" என்றான்  .

            ஏல , அழுவாத ! என்ன சைக்கிள் பழகுறது ரொம்ப லேசுன்னு நினைச்சியோடே ?  .இந்தா ,  இந்த தழும்ப பாரு என்றார் . அவரோட நெற்றிலயும் , முழங்கால்லயும்     இரண்டு தழும்பு இருந்தது . இதெல்லாம்  நான்  சைக்கிள் மிதித்து  பழகும் போது   வந்தது . பயப்படாத ! எந்திரிச்சு மிதி , இனிமே சைக்கிளை  விட மாட்டேன்னார் . இது நடந்து சில நாட்களில் இவனும்  சில அடிகளெல்லாம்  பட்டு ,  ஒரு வழியா சைக்கிள் ஓட்ட கத்துக்கிட்டான் . பிறகு  ஒன்பதாம் கிளாஸ் போகும்போது அப்பா  ஒருவழியாக,  இவனுக்கு புது சைக்கிள் வாங்கி கொடுத்தார்.

     அந்த சைக்கிள் வீட்டுக்கு வந்த நாள் இருக்கே , அன்னிக்குத்தான்  உண்மையிலே திருநாள் போலே இருந்தது . ஏன்னா  இவன் கடந்த  மூன்று வருசமும்  தினமும் எட்டு  கிலோமீட்டர் (போக - 4, வர - 4 ) நடந்து போய்தான் படித்துக் கொண்டிருந்தான் . சில சமயம் லேட் ஆனா அழுதுகிட்டே ஸ்கூல்க்கு ஓடுவான் .

         இவன் ஏழாம்   வகுப்பு படிக்கும்போது அண்ணன் ஒன்பதாம் வகுப்பு படித்தான் . எவ்வளவோ குட்டிக்கரணம் அடித்தும் ஒன்பதாம் வகுப்பில் பெயிலாகி விட்டான்  . பின் அம்மா அவனை டுடோரியல் அனுப்பி படிக்கச் சொல்லியும் பாஸாகவில்லை   . அதனால்  அப்பா எப்படியாவது இவனை  படிக்க வைத்து விட வேண்டுமென்ற வைராக்கியத்தில்  புது சைக்கிள் வாங்கிக் கொடுத்தார் . தினமும் ஸ்கூல் முடிஞ்சதும் சைக்கிள்-ல போட்டி போட்டுத்தான் இவனும்  , இவன் நண்பர்களும்  வருவாங்க  . அதுவும் பொம்பளை பிள்ளைகளை கண்டுட்டா போதும் . இரண்டு கையையும் விட்டுட்டே வண்டி ஓட்டுவாங்க !.
 
           இப்படி ,   ஸ்கூல்  முடிக்கிற  வரை சைக்கிளைத்தான்  உபயோகித்தான் . பிறகு டிகிரி படிக்கிறதுக்காக  கோயம்புத்தூர் வந்து கல்லூரி விடுதியிலே தங்கியதால் அதற்கும் , இவனுக்கும்  இடையில் இருந்த பிணைப்பு சிதைந்து போனது. இப்பவெல்லாம் சைக்கிள் யாரு உபயோகப்படுத்துறாங்க? சொல்லுங்க பார்ப்போம்? . ஜெயபால்  சித்தப்பா பையன் , வாடியூரில்  ஒன்பதாம் வகுப்பு படிக்கிறான் . இப்பவே அவரோட பைக்கை  வீட்டுல சும்மா இருக்க விடுறது இல்ல . 'வாடகை சைக்கிள் நிலையத்தின்' மூலமாக சம்பாதித்த பணத்தில்தான் , மாமா மூத்த மகளுக்கு நகையே வாங்கினார் . இன்றைக்கு அவரும் சைக்கிள் கடையை மூடிவிட்டு வேறு வேலைக்குச் சென்று விட்டார்!

            இவன் அப்பா அம்மாவுக்கு அடுத்தபடியாக  இன்று இந்த அளவு இவன் படித்ததற்குக் காரணம் சைக்கிள்தான் . ஏனென்றால் அப்போதெல்லாம் இப்ப உள்ளது போல  , பஸ் வசதியே கிடையாது . ஒரு நாளில் ஒரு ஊருக்கு ஒரு  முறை மட்டுமே வந்து போகும் பேருந்தால் என்ன நன்மை ஏற்பட்டு விடும் ? . இவன்  ஐந்தாம் கிளாஸ் செட்டுல முப்பது பேர் படிச்சாங்க  . அதுல மொத்தத்துலே   ஐந்து பேர் மட்டும்தான் ( ஆண்-3 , பெண்-2 ) ஸ்கூல் படிப்பை  முடித்தார்கள் . ஆண்களை விடுங்க , இவன் செட்டுல படிச்ச பெண்கள் தொடர்ந்து மேலே படிக்காததற்கு ஒரே  காரணம் போக்குவரத்து வசதியின்மைதான் .

          காலமாற்றத்தினாலும் ., முதுமையினாலும் மாட்டுவண்டி ஒட்டிய   அப்பா இன்று ஸ்கூட்டர் வைத்திருக்கிறார் . சைக்கிள்  ஒட்டிய இவன்  பைக் வைத்திருக்கிறான் . கடந்த  வாரம் ஊருக்குச்  சென்றிருந்தான் . நள்ளிரவில்தான் வீடு போய்  சேர்ந்தான்  .  அன்று இரவு நல்ல மழை   . காலையில் எழுந்தவுடன் பல் தேய்ப்பதற்காக   புழக்கடை பக்கம் சென்றான் .
அங்கே இவன்  பழைய சைக்கிளிலிருந்து   கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சொட்டிக்  கொண்டிருந்தது .  அது கண்ணீர் சிந்துவது போல இவனுக்குத்   தோன்றியது!  உங்களுக்கு ?

       

Tuesday, December 3, 2013

நல்லாசிரியர்


                               நல்லாசிரியர்


          இரவு நிலவு தன்னுடைய வேலையை சிறிது நேரத்தில் முடித்துக் கொண்டு , இன்னும் சற்று நேரத்தில் சூரியன் வர இருக்கும் மன ரம்மியமான காலைப்பொழுது தொடங்கிவிட்டது  என்பதற்கு அடையாளமாய் சுப்ரபாதப் பாடல்களும் , கிறிஸ்தவப் பாடல்களும் இவற்றினூடே நானும் சளைத்தவனல்ல என்று சொல்லும் விதமாய் சேவல்களும் குரலெழுப்பின . நீர்த்திவலைகள் காற்றில் கலந்து பனிப்படலமாய் எங்கும் சூழ்ந்திருந்தன . அநேகம் பெண்கள் புதிய நாளை வரவேற்கும் விதமாய் , வீட்டின் முன் கிடந்த முந்தைய நாள் குப்பைகளையெல்லாம் நீக்கி , சாணம் தெளித்து கோலம் போட்டுக் கொண்டிருந்தார்கள் . இன்னும் சிலர் மாரத்தான்  ஓட்டப் பந்தயத்தில்   கலந்து  கொண்டவர்கள் போல ஓட்டமும் , நடையுமாய் மேற்குப் பக்க கண்மாய் நோக்கி சென்று கொண்டிருந்தார்கள் .

                 துறையூர் என்பதுதான் அந்த ஊரின் பெயர் . தாமிரபரணி ஆறு பாய்ந்து வளம் கொழிக்கும் , திருநெல்வேலி அருகே உள்ள ஒரு சிறு கிராமம்தான் அந்த ஊர் . அந்த ஊரில் ஒரு காலத்தில் படித்தவர்கள் மிகக்  குறைவு !

              ஆனால் தற்போது அந்த நிலை முற்றிலும் மாறி அனேகர் படித்து வெளியூர்களில் நல்ல வேலையில் அமர்ந்திருந்தார்கள் , விவசாயம் செய்யத்தான் ஆளில்லை !. டவுண் பக்கத்தில் உள்ள ஊர் என்பதால் , எல்லா  விவசாய நிலங்களும் தற்போது வீடுகளாகவும் , பிளாட்டுகளாகவும் உருமாறிக்கொண்டிருந்தன .

          சேவியர் , அதுதான் அந்த ஆசிரியரின் பெயர் .  அந்த ஊரில் தற்பொழுது இருக்கின்ற ஒரு சில ஆசிரியர்களில் அவரும் ஒருவர் . இவர் மற்ற ஆசிரியர்களோடு ஒப்பிடும்போது மிகவும் வித்தியாசமானவர் . எப்படியென்றா ல்

          "ஆசிரியர்  பணி  ஒரு அறப்பணி
            அதற்கே நீ உன்னை அர்ப்பணி !"

                என்ற வசனத்தின் பிரகாரமாய் , இவர் வேலையில் சேரும்போது எப்படி அர்ப்பணிப்பு உணர்வுடன் இருந்தாரோ , அப்படியே வேலையிலிருந்து ஓய்வு பெறப்போகும் இந்த நாள் வரை  அர்ப்பணிப்பு உணர்வுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தவர் , திகழ்ந்து கொண்டிருப்பவர் !.

           முப்பது வருடங்களுக்கு முன்பு , இவர் வேலையில் சேர்ந்த பொழுது 'வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை' என்ற வார்த்தைதான் மிகவும் பொருத்தமாக இருந்தது . இவருடைய குடும்பமும் மிகவும் ஏழ்மையான நிலைமையில் இருந்தது .அதுமட்டுமல்ல வாத்தியார்  வேலையிலும் சொல்லிக்கொள்ளும்படி  வருமானம் அப்போது இல்லை . ஆனாலும் இவர் ஆசிரியர் வேலையை முழு ஈடுபாட்டோடு செய்து வந்தார் . அன்றைய காலகட்டம் முதற்கொண்டு , வக்கில்லாத இந்த வாத்தியார் பல வக்கில்லாத , படிப்பதற்கே லாயக்கில்லாத மாணவர்களை மிக அருமையாகக்  கிளிப்பிள்ளைக்கு சொல்லிக்கொடுப்பதைப் போல சொல்லிக்கொடுத்து , அவர்களை வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு கொண்டுசெல்ல கல்வி மூலம் உதவிபுரிந்தார் .

         இவரிடம் படித்த பலர் இன்று சமுதாயத்தில் டாக்டர்களாகவும் , வக்கீல்களாகவும் , இஞ்சீனியர்களாகவும், இராணுவத்தின் உயர்ந்த பதவிகளிலும் இன்னும் பல துறைகளிலும் சிறந்து விளங்கிக் கொண்டிருக்கின்றார்கள் . சமீபத்தில் கூட பெங்களூரில் விப்ரோ கம்பெனியில் பணிபுரியும் இவருடைய இளைய மகன் , செல்போனில் பேசும்பொழுது , தான் இவருடைய முன்னாள் மாணவர்  ஒருவரை சந்தித்ததாகவும் , அவர் தற்போது விவசாயத்தில் முதுகலை பட்டம் முடித்து விட்டு பெங்களூர் அருகில் மிகப்  பெரிய விவசாயப்  பண்ணை அமைத்து அதில் இயற்கையான முறையில் அற்புதமாக விவசாயம் செய்து வருகிறார் எனவும் கூறினான் . தமிழ்நாட்டில்தான் படித்தவர்கள் யாரும் விவசாயம் பார்ப்பதில்லையோ? இந்தக்  காலத்தில் இவர் தற்போது வசிக்கும் கிராமத்தில் கூட , இந்த தலைமுறையைச் சேர்ந்த யாரும் விவசாயம் பார்ப்பதில்லை!


          நிற்க , விசயத்திற்கு வருவோம் காலையில் எழுந்து சோம்பல் முறித்த  வாத்தியார் முகம் கழுவி , அவருடைய அறைக்குச் சென்று சிறிது நேரம் ஜெபித்தார் . ஜெபிப்பது அவருடைய அன்றாட வாழ்க்கையின் முதல் பணி . இத்தனை வருட வாழ்க்கையில் நோய் வந்து படுத்த சில நாட்களைத்  தவிர மற்ற நாட்களில் இவர் ஜெபிக்காமல் இருந்ததே கிடையாது . இவர் இந்த ஜெபத்தின் அவசியத்தை , பலமுறை தன்னுடைய மாணவர்களிடம் கூட வலியுறுத்தியுள்ளார் .

               ஜெபம் முடித்து வெளியே வராந்தாவில் அமர்ந்து , இவர் அன்றைய தினசரி பேப்பரைப் புரட்டுவதற்கும் இவர் மனைவி காபிகொண்டுவருவதற்கும் சரியாக இருந்தது . காபியைப் பருகிக்கொண்டே  பேப்பரைப் புரட்டினார் . முதல் பக்கத்திலேயே டெபாசிட் இழந்த நடிகர் ஒருவர் இன்று புதிய கட்சி ஆரம்பிக்க இருப்பதாகவும் , கட்சிக்கொடியை அறிமுகப்படுத்தப்போவதாகவும் எழுதியிருந்தது  . அன்று ஒரு சில நடிகர்களே இருந்தார்கள் , ஆனால் இன்றுள்ள நிலைமையில் டெபாசிட் இழக்கும் நடிகர் ஒவ்வொருவரும் ஒரு  கட்சி ஆரம்பித்தால் கிட்டத்தட்ட எண்ணிக்கை நூறை தாண்டும் போல் இவருக்குத் தோன்றியது .


          மூன்றாம் பக்கத்தில் வந்ததும் , அங்கு இவர் கண்ட காட்சி இவரை நிலைகுலைய வைத்தது . அது என்னவென்றால் , கோவையில் பல இடங்களில் குண்டுவெடிப்பு ,  20 பேர் உயிரிழப்பு , இன்னும் 30 பேர் கவலைக்கிடமான நிலைமையில் மருத்துவமனையில் உள்ளதாக செய்தி போடப்படிருந்தது . இவ்வளவு தூரம் கல்வியறிவு கூடியும் இன்னும் இந்த வெடிகுண்டு கலாச்சாரம் தீரவேயில்லையே என்று இவர் வருந்தினார் . அந்த செய்தியை விரிவாக படிக்க ஆரம்பித்தார் . அதில் , இந்த குண்டுவெடிப்புக்கு காரணமான ஒரு குற்றவாளியை கைது செய்து விட்டதாகவும் , அவனுடைய பெயர் சு.. என்றும் , அவன் கோவை உக்கடம் பகுதியை சேர்ந்தவன் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது . இவனுக்குப் பின் இன்னும் நிறைய பேர் உள்ளார்கள் எனவும் , அவர்களையும் விரைவில் பிடிப்போம் என உக்கடம் காவல் நிலைய காவல் துறை அதிகாரி தெரிவித்திருந்தார் .
குற்றவாளியினுடய படத்தையும் தெளிவாக பேப்பரில் போட்டிருந்தார்கள். இவர் அதை நன்கு உன்னிப்பாகக் கவனித்தார் .


    அவனுடைய படத்தை நன்கு உன்னிப்பாக கவனித்ததும் இவருக்கு தூக்கி வாரிப் போட்டது . அவன் வேறு யாருமல்ல , பத்து  வருடத்துக்கு முன்பு இவர் கோவையில் வேலை செய்த பொழுது , உக்கடம் அரசுப்பள்ளியில் இவரிடம் பத்தாம்   வகுப்பு படித்த மாணவன் . அவனைப் பற்றி பேப்பரில் போட்டிருந்த எல்லாத் தகவல்களை வைத்தும் , மேலும் இவருடன் அப்போது வேலை செய்த ஆசிரியர்கள் மூலமாகவும் விசாரித்து அவன்தானா  இவன்? என உறுதி செய்து கொண்டார் . இவருக்கு மனசு என்னவோ செய்தது .இவ்வளவுக்கும் இன்றுதான் இவருடைய ஆசிரியப்பணியின் கடைசி நாள் . 58 வயது முடிவதால் இன்றோடு இவருக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்படுகின்றது . அதனால் இன்று இவர் கண்டிப்பாக பள்ளி சென்றாக வேண்டும் . மனசே இல்லாமல் ஏதோ ஒப்புக்குக்  குளித்து , பள்ளிக்கு கிளம்பிச்  சென்றார் .  தற்போது இவர் துறையூரிலுள்ள   பள்ளியில்தான் வேலை செய்கிறார் . காலை சிற்றுண்டி கூட சாப்பிடாமல் சென்றார் .


       அன்று முழுவதும் தான் சென்ற வகுப்பு மாணவர்களுக்கு அறிவுரைகளும் , சமுதாயத்தில் நல்லவனாக வாழவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார் . பின்னர் சாயங்காலம் சரியாக 3 மணியளவில் , பள்ளி மைதானத்தில் வைத்து எல்லா மாணவர்கள் , ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர் முன்னிலையில் இவருடைய பிரிவுபசார விழா நடைபெற்றது .

     பல ஆசிரியர்கள் இவரைப் பற்றியும் , இவருடைய முப்பது  வருட ஆசிரியப்பணி குறித்தும் சிலாகித்துப் பேசினர் . இறுதியில் தலைமையாசிரியர் பேசி முடித்த பின்  இவருடைய சேவையைப் பாராட்டி , இவருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படும் என அறிவித்தார் .

     அனால் , இவரோ அந்த நல்லாசிரியர் விருதை ஏற்றுக் கொள்ள மறுத்தார் . மேலும் இந்த விருதுக்கு தான் தகுதியானவல்ல என்றும் , அதற்குத் தன்னை தகுதிப்படுத்திக்கொள்வதாகவும் கூறி முடித்துக் கொண்டு , வேக வேகமாக வீட்டிற்க்குச்  சென்றார் .

    பள்ளியிலிருந்து வீடு செல்லும் வழியில் , இவருடைய மனதில் பைபிளில் உள்ள ஒரு வசனம் திரும்ப திரும்ப வந்தது.


       " ஒரு நல்ல ஆயன் தன்னிடமுள்ள 100 ஆடுகளில் 1 தொலைந்துபோனால் , மீதமுள்ள 99 ஆடுகளுக்ககாக சந்தோஷப்படாமல் ,  தொலைந்துபோன அந்த 1 ஆட்டுக்காக பரிதவிப்பான் . எப்போது அதை கண்டுபிடிக்கிறானோ அப்போது   மிக அதிக சந்தோஷமடைவான்  ".
       
       வீட்டுக்கு வந்தவர் வேக வேகமாக சில துணிகளை எடுத்து பையில் வைத்துக்கொண்டு , தான் கோவைக்குத் தன்னுடைய நண்பர் வீட்டுக்குச் செல்வதாகவும் , திரும்பிவர நாலைந்து நாள் ஆகுமெனவும் கூறினார்.

   அவர் அந்த நல்லாசிரியர் விருதை ஏற்றுக்கொள்ளாவிட்டால்  என்ன , என்றுமே இவருடைய மாணவர்கள் மனதில்  இவர் ஒரு நல்லாசிரியர்தான் !. #